உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
(04) காலை விவசாய அமைச்சில் உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் திட்டமும், இந்தப் பருவத்துக்கான உணவுப் பயிர்த் திட்டமும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாயச் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் அறுவடை செய்யப்படவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களும் அழிவடைந்துள்ளன.
தாழ்வான பகுதிகளில் மரக்கறி பயிர்களும் மழையினால் நாசமாகியுள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் தோட்டங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.