இலங்கை வந்ததடைந்த நான்கு எரிபொருள் கப்பல்கள்!
கொழும்பு துறைமுகத்தில், இரண்டு கப்பல்களில் இருந்து டீசலை விடுவிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொடருந்துகள் மற்றும் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் கையிருப்பு விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு எரிபொருள் கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட டீசல் கையிருப்பை இறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 35,000 மெற்றிக் தொன் பெட்ரோல் கொண்ட கப்பலானது தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனேகமாக நாளை கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே இனி எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.