கோட்டா நாட்டை விட்டு ஓடவில்லையாம் தவறுதலாக கூறியதாக மஹிந்த தெரிவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ANI உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் பிபிசி பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.