உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சி கின்னஸ் உலக சாதனை பட்டியலில் IPL

ஐபிஎல்-லின் 15வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய இறுதிபோட்டியில், ஐபிஎல் நிர்வாக குழு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சி உருவாக்கி அதனை கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறச் செய்துள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

ஐபிஎல்-லில் கால்பதித்த முதல் சீசனிலே கோப்பை வென்று குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்து இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரையும் அதன் நிர்வாகிகள் சாதனை பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளனர்.

அகமதாபாத்-தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சியை ஐபிஎல் நிர்வாகிகள் உலகிற்கு வெளிப்படுத்தி அதனை கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளனர்.

ஐபிஎல்-லில் இடம்பெற்று இருந்த 10 அணிகளின் சின்னங்கள் பொறிக்கபட்ட மற்றும் கிட்டத்தட்ட 66×44 என்ற மீட்டர் அளவு கொண்ட இந்த கிரிக்கெட் ஜெர்சியை கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி அறிமுகம் செய்து வைக்கவே, அதற்கான கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் பிரஜேஷ் படேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *