இந்தியா- தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் சர்மா , கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்த நிலையில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், போட்டியின் 7-வது ஓவரில் மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர்.
பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். பின்னர், பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து மைதானத்திற்குள் சுற்றிய பாம்பை பிடித்து சென்றனர். மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் தடைபட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டி நடைபெற்று வரும் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.