IPL கோப்பையை வென்று சரித்திரம் படைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி!

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக் கோப்பை தட்டி சென்றுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தானத்தில் வைத்து நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-யின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்க முடிவு செய்ததது. ஆனால் குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஓட்டங்களை குவிக்க திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இருப்பினும் ஒருமுனையில் நிதானமாக விளையாடி வந்த ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லரும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களை குவித்த போது ஹர்திக் பாண்டியா வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 130 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து, 131 ஓட்டங்கள் என்ற சிறிது எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும், குஜராத் அணியின் இளம் தொடக்கவீரர் சுப்மன் கில் கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 133 ஒட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற்று 2022ம் ஆண்டின் ஐபிஎல் வெற்றிக் கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

மேலும் அறிமுகமான முதல் சீசனிலேயே ஐபிஎல்-லின் சாம்பியன் கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *