உலகை அச்சுறுத்தும் நிபா வைரஸ் பெருந்தொற்றாக மாறும் அபாயம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடியாத நிலையில், தற்போது நிபா வைரஸ் பெருந்தொற்றாக மாறிவிடுமா என்ற அச்சம் அதிகமாக மக்களிடம் ஏற்பட்டுளளது.

தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் சற்று குறைந்துள்ள நிலையில், ஆனால மற்ற உலக நாடுகளில் தனது 3வது அலையின் தீவிரத்தினைக் காட்டி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகின்றது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் ஒரு பீதியில் ஆழ்த்தி சென்றுள்ள நிலையில், இந்திய மாநிலம் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது நிபா வைரஸ் மீண்டும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது. கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் 700 பேர் மட்டும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்று சுகாதார நிபுணர் கூறிவருகின்றனர்.

இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2001 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்திலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கேரளாவிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.

வவ்வால்கள் மற்றும் பன்றிகள் தான் இந்த வைரசின் பிறப்பிடம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் 1990ஆம் ஆண்டுகளில் நிபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சோதனை

இந்த வைரஸ், மனித உடலுக்குள் புகுந்த 4 முதல் 14 நாட்களில் நோய் அறிகுறி தென்படும் என்றும் ரத்தம், சிறுநீர், தொண்டையிலிருந்தும், மூக்கிலிருந்தும் வெளியாகும் சளி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி இவ்வகை வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் உண்டாகும் அறிகுறிகள் கொரோனா வைரஸால் ஏற்படும் அறிகுறிகளை போன்றே இருக்கும். இது இருமல், தொண்டை புண், தலைசுற்றல், மயக்கம், தசை வலி, சோர்வு மற்றும் மூளையில் வீக்கம் (மூளையழற்சி), தலைவலி, கடுமையான கழுத்து வலி, மன குழப்பம், வலிப்பு மற்றும் ஒளியின் உணர்திறன் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். மேலும் இந்த வைரஸால் ஒரு நபர் மயக்கமடையக்கூடும். இறுதியில் இவை மரணத்திற்கு வழிவகுக்கும்.

சிகிச்சை

நிபா வைரசுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை எந்த மருந்தும் அங்கீகரிக்கப்படவில்லை. மூளையழற்சி மற்றும் பிற அறிகுறிகளைக் கவனிப்பதற்காக சில மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன.

உடல்நலக் குறைவுக்கான சிகிச்சை அளிக்க கூடிய மருந்துகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விழிப்புணர்புடன் இருப்பதற்கு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிபா வைரஸ் பாதித்த விலங்குகள்

நிபா வைரஸ் தொற்று பரவியதாக தெரியவந்தால் விலங்குகள் வசிக்கும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துவதுடன் அது போன்ற விலங்குகளை தனிப்படுத்த வேண்டும்.

நிபா வைரஸ் தாக்கி இறந்த விலங்குகள் உடல்களை பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும். பன்றிகளும், பழந்தின்னி வவ்வால்களும்தான் நிபா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

குறிப்பாக மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்கள், கடிக்கப்பட்ட பழங்கள் உண்பதை தவிர்ப்பதுடன் மற்ற பழங்களை நன்கு கழுவியும் உண்பது வைரஸ் பரவலை தடுக்க உதவும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *