சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வர திட்டம்?
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை எனக் கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் நுவரெலியாவில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே இந்த அரசாங்கத்தின் திட்டம். இதற்கு விவசாயிகள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி (05) திகதி நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய மார்கட் கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடலிற்கு முன்பாக கூடி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகர வர்த்தகர்களும் தங்களுடைய வியாபார நிலையங்களை ஒரு மணித்தியாலத்திற்கு மூடி தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கினர்.
நுவரெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.