ஞானசார தேரரின் வாக்குறுதியையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னெடுத்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஒரு மாதத்துக்குள் தரமுயர்த்தப்படும் என ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவுசெய்துள்ளனர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை, ஏனையவர்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளனர் என்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய மதகுருமார்கள் அறிவித்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு, அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆதரவை வழங்கி வந்தனர்.

இன்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் உட்பட மகாசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது ஒரு மாத காலத்துக்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த தான் நடவடிக்கை எடுப்பதாகவும், அவ்வாறு முடியாமல்போனால் இந்தப் போராட்டத்தைத் தனது தலைமையில் முன்னெடுப்பதாகவும் ஞானசார தேரரினால் உறுதியளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெட்ணம் ஆகிய நால்வரும் தமது போராட்டத்தை நீர் அருந்து முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதன்பின்னர் அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரையில் தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

இதேவேளை, தாங்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ள போதிலும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நான்கு பேரும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *