ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியை மக்கள் உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
ராஜபக்ஷ அரசாங்கத்தின் அநீதியான ஆட்சியை மக்கள் உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவின் விடுதலையையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடித்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவை சூட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்னை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புனித பொசன் தினத்தன்று துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார். துமிந்த சில்வாவின் விடுவிப்பினையடுத்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் பிரேமச்திரவின் மகள் ஹிருணிகா ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மேல் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பினை ஜனாதிபதி கோட்டாபய தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி கொச்சைப்படு்த்தியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் சட்டவாட்சி நடக்கின்றதா என்ற கேள்வியினை கேட்கவிரும்புவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஒருசிலரின் கைகளில் சிப்பாயாக மாறிவிட்டார் எனவும், துமிந்த சில்வா எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டாலும் ஆச்சரியமில்லை எனவும் ஹிருணிகா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆட்சியாளர்களின் அநீதியினை மக்கள் உடைத்தெறியும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் ஹிருணிகா தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.