மூன்று அங்குல நீளமான ஊசியை விழுங்கிய சிறுவன்!
வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக 3 இஞ்சி நீளமான ஊசியை விழுங்கியிருந்தான்.
இந்த நிலையில், அனுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்கள் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் ஊசி வெற்றிகரமாக வெளியே அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் சிறுவன் ஒருவன் 3 இஞ்சி நீளமான ஊசி ஒன்றினை தனது வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாய் வழியே அவ் ஊசி சென்றுவிட்டது.
இதையடுத்து சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு காவு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டான் .
இதேவேளை குறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று இதயம் நுரையீரல் துளைக்க நேரிடும் என்ற அறிகுறிகள் கதிரியக்க படத்தில் தெரியவந்துள்ளது .
இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியர்களின் விரைந்து செயலாற்றி 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வாய் வழியே ஊசி வெளியேற்றப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் குறித்த சிறுவன் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளான்.
அனுராதபுரம் வைத்தியர்களின் இந்த செயற்பாடு பலரையும் வியக்க வைத்துள்ள நிலையில் , வைத்தியர்களுக்கு பலரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.