நிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் நேற்று கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒரு வரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.எனினும் உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்..
இதனை தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி பார்வையிட்டார்.
அதன் பின்னர் அதிகமான மக்கள் பார்வையிட்டு சென்றிருந்த நிலையில், இறந்த பெண்ணின் மருமகன் இரவு அடையாளம் காட்டியிருந்தார். இதனடிப்படையில், நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயான 57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும், சம்மாந்துறை பொலிஸாரும் மேலதிக விசாரணை களை மேற் கொண்டு வருவதுடன் இப்போது சடலம் சம்மாந்துறை வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது .