இலங்கை மக்களிடம் ஜனாதிபதி பணிவான வேண்டுகோள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் – மார்ச் 18ஆம் திகதியிலிருந்து இலங்கை முழுவதுமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதிக ஆபத்து நிறைந்த பகுதிகள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முதன்மை வணிக நகரமாகிய கொழும்பின் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறன.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற, சுகாதார ரீதியில் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியிலும் நாம் பலம் பெற்றிருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் இப்போது உணர்ந்திருக்கின்றோம்.
மீண்டும் பணிகளுக்குச் செல்லும் உங்களுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற அமைப்புகள் நிறைய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
அவற்றை முழுமையாகப் பின்பற்றி உங்களையும், சக பணியாளர்களையும், உங்கள் குடும்பத்தினரையும், இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க உதவுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.