ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே எனது முழு நோக்கம்! – சஜித் திட்டவட்ட அறிவிப்பு
“அதிகபட்சமாக ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே எனது நோக்கம்.”
– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று பல நிகழ்வுகளில் முழக்கமிட்டு வரும் சஜித் பிரேமதாஸ, கொழும்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“நாட்டு மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறுபடுத்துவது நியாயமற்றது. எவ்வாறாயினும் ஒருமித்த இலங்கை என்ற கொள்கையில் எந்தவித விட்டுக்கொடுப்பும் செய்துகொள்ளப்படாது.
ஒருமித்த இலங்கை என்பது எழுதப்பட்ட ஆவணமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாறாக அதனை ஒவ்வொரு இலங்கையர்களும் மன ரீதியாக உணர வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றேன்.
இவற்றை முன்னெடுக்க வேண்டுமாயின் இனவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும்” – என்றார்.