முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சுப் பதவி ஏற்பதில் தொடர்கிறது இழுபறி நிலை!
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்பதில் இழுபறி நிலை தொடர்கின்றது.
அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பில் இருந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டு நேற்று மாலை அமைச்சுப் பொறுப்புக்களை அவர்கள் ஏற்பதாக இருந்தது. ஆனாலும், அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த அனைவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதென்று முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை மீண்டும் ஏற்கப்போவதில்லை என்று கூறியுள்ள நிலையில் நேற்றைய அமைச்சுப் பொறுப்பேற்கும் நிகழ்வு தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என அறியமுடிந்தது.
அமைச்சுப் பொறுப்பேற்கும் நிகழ்வுகள் நடக்குமா என்று ரிஷாத் பதியுதீன் எம்.பியிடம் கேட்டபோது, “அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும் இந்த விடயத்தில் கூட்டுத் தீர்மானம் எடுத்த பின்னர் அது நடக்கும்” என்று தெரிவித்தார்.