ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை! – பிரதமர் ரணில் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன எனவும், இந்தக் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்படப்பட்டுள்ளன எனவும், இதற்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை எனச் சபாநாயகர் அறிவித்திருக்கின்றார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெடர்பாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் சில பிரிவுகளைச் சிலர் நிராகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறு செய்வது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதாக அமையும். ரிஷாத் மீது எந்தக் குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியமளித்தபோது ரிஷாத் பதியுதீன் தமக்கு எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.

புலனாய்வுப் பிரிவின் அறிக்கை சட்டமா அதிபர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *