காணாமல் ஆக்கப்பட்ட மகனை 30 வருடங்களாகத் தேடியலைந்த தாய் மரணம்!
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.
1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக இவர் உயிரிழந்தார்.
இவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார். எனினும், தனது மகனைக் காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கேப்பாப்பிலவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வியாழம்மாவுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.