சம்பந்தனின் கருத்து வேடிக்கையானதாம்! – நாமல் கூறுகின்றார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து வேடிக்கையானது என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த பிரேரணை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள், புதிய வலுவான அரசாங்கம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தேர்தல் வாய்ப்புக்காகக் காத்திருக்கையில், இந்த ஊழல் அரசாங்கத்தை சுயநல சலுகைகளுக்காகப் பாதுகாக்க வாக்களித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலுவான ஓர் அரசாங்கத்தை அமைப்பதைத் தடுப்பதற்காகவே தாம் வாக்களித்ததாக சம்பந்தன் ஐயா நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியது வேடிக்கையானது” – என்று குறிப்பிட்டுள்ளார்.