உழைப்போர் தினத்தில் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்
” தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த நேரத்தில் பயங்கரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி பெறுமதி மிக்க உயிகள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எத்தனையோ கனவுகளுடன் ஆலயத்துக்கு வந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. இந்தச் சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தாருடன் சேர்ந்து மேதினத்தில் அஞ்சலி செலுத்தி ஆன்ம ஈடேற்றத்துக்கு பிரார்த்திப்போம்.”
இவ்வாறு நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
” குண்டு வெடிப்பில் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்தான சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் விதத்தில் தேவாலயங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் நாடு கவலையில் மூழ்கியுள்ளது.
இதனால், கிறிஸ்தவ மக்கள் வழமையாக ஞாயிற்றுக்கிழமை நாளில் மேற்கொள்ளும் ஆராதனை இடம்பெறவில்லை. எனினும், மக்கள் அவசரப்படாமல் சிந்தித்து செயற்பட்டு நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்கள்.
மீண்டும் நாடு வழமையான நிலைக்குத் திரும்பி சமய வழிபாடுகள தங்கு தடையின்றி இடம்பெறவும், இனங்களுக்கு மத்தியில் சகோதரத்துவ சௌஜன்யம் நிலைக்கவும் உழைப்பாளர் தினமான மேதினத்தில் அஞ்சலி செலுத்துவோம்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா