சஹ்ரானின் மற்றுமொரு பயிற்சி முகாம் சிக்கியது!
இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் உட்பட 35 பேர் பயிற்சி பெற்ற முகாமொன்றை நுவரெலியாப் பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டடமே இன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே, இந்தக் கட்டடம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இங்கு சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்ட 35 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என நுவரெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கட்டடத்திலேயே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான இறுதிப் பயிற்சி, ஏப்ரல் 17ஆம் திகதியன்று ஒத்திகை பார்க்கப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.