சாய்ந்தமருது சம்பவத்தில் சஹ்ரானின் தந்தையும் இரு சகோதரர்களும் மரணம்!
உயிர்த்த ஞாயிறன்று நடந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாசீமின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் சகோதரான நியாஸ் ஷரீப் இது குறித்து செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சாய்ந்தமருது துப்பாக்கிச் சண்டைக்கு முன்னர் சந்தேகநபர்கள் வெளியிட்ட விடியோவில் இருக்கும் மூன்று பேர் சஹ்ரான் ஹாசீமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
சஹினி ஹாசீம், ரில்வான் ஹாசீம் ஆகியோர் சஹ்ரான் ஹாசீமின் சகோதரர்கள். அவரது தந்தையான மொஹமட் ஹாசீமும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாக நியாஸ் ஷரீப் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயற்சித்தபோது, இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச்சூட்டுச் சண்டடை நடைபெற்றதுடன் வீட்டுக்குள் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவரையும் சிறுமி ஒருவரையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். இவர்கள் சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
அப்துல் காதர் பாத்திமா சாதியா என்ற பெண்ணும் அவரது மகளான 5 வயதான மொஹமட் சஹ்ரான் ருசெய்னா ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.