விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படுமோசம்!

அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் அரசு;
வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தனிநாடான தமிழீழத்தைப் பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பயங்கரவாதத்தை விஞ்சிய படுமோசமான தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அரசு உயிருடன் விடக்கூடாது. அனைவரையும் முற்றாக அழித்தொழிக்க வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.

சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மதவெறி பிடித்த – இனவெறி பிடித்த – கொலைவெறி பிடித்த கோழைகளாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் கொள்கை இல்லாமல் படுமோசமான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து அவர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் சாவடிக்கப்பட்டார்கள்.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது குடும்பங்களுடன் குண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளனர். 15 பேர் பலியாகிய இந்தச் சம்பவத்தில் 6 பச்சிளம் பாலகர்களும் சாவடிக்கப்பட்டுள்ளார்கள். இப்படி ஈவிரக்கமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களை உயிருடன் விடக்கூடாது. அவர்களை அரசு முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *