கொடூர சம்பவங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு! – ‘தௌஹீத் ஜமா அத்’துடன் தொடர்புள்ள சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

“ஜனாதிபதி சட்டம், ஒழுங்கு அமைச்சை வைத்திருக்கவே முடியாது. நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் விசாரிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது:-

“இந்தத் தாக்குதல்கள் குறித்து எந்தவொரு தனி சமூகத்தையும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. அதனை நாங்கள் மதிக்கின்றோம்.

தேசிய தௌஹீத் ஜமா அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.

அடிப்படைவாதம் குறித்து முஸ்லிம் அமைப்புக்கள் பல அரச புலனாய்வுத்துறையிடம் முன்னதாகக் கூறியிருந்தன.

நாங்கள் வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தோம். ஆனால், கிழக்கு மாகாண ஆளுநர் அதனைக் ஹர்த்தால் என்கிறார். அது ஹர்த்தால் இல்லை என நான் தெளிவாகக் கூறுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *