வடக்கில் படை விலக்கல் சாத்தியமே இல்லையாம்! – அரசு கூறுகின்றது
வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கல் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவிடம் கருத்துக் கேட்டபோது,
“தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்லுமாறு கேட்க முடியாது.
இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால், அரசு சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும்.
அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும்.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில்கொண்டு, இப்போது, குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாது.
இந்த நிலைமையில் பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்துக் கலந்துரையாடி, அரசு பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.