வடக்கில் மட்டும் 4,142 ஏக்கர் நிலம் படையினர் வசம்! – பொய்யானது மைத்திரியின் கூற்று

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது; உண்மைக்குப் புறம்பானது என்பது மாவட்ட செயலகங்களின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு சம்பந்தமான தற்போதைய நிலைமை மற்றும் தீர்வுகள் பற்றி மக்கள் பிரதிநிதிகள், படையினர் இடையில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற வடக்கு – கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் ஆராயப்பட்டது. இதன்போதே குறித்த எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 642 ஏக்கர் தனியார் நிலம் படையினரின் வசம் உள்ளது. மன்னார் மாவட்டத்தில் 211 ஏக்கர் தனியார் நிலம் படையினரின் வசம் உள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 132 ஏக்கர் தனியார் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 101 ஏக்கர் தனியார் நிலமும் படையினரிடம் உள்ளதோடு வவுனியா மாவட்டத்தில் 56 ஏக்கர் தனியார் நிலம் படையினரிடம் உள்ளது. இதன்படி வடக்கு மாகாணத்தில் மட்டும் 4 ஆயிரத்து 142 ஏக்கர் தனியார் நிலம் படையினரிடம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *