ஜெனிவாத் தீர்மானத்தை நிராகரிப்பின் இலங்கையின் மாற்றுத் திட்டம் என்ன? – அரசிடம் கேள்வி எழுப்புகின்றது ஐ.நா.
“ஜெனிவாத் தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரிக்குமாக இருந்தால், அவற்றுக்குப் பதிலாக முன்வைக்கவுள்ள மாற்றுப் பொறிமுறைகள் என்ன?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சட்ட சமத்துவ மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான பிரிவின் தலைவர் மோனா ரிஷ்மாவி.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு, இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும்.
இலங்கையின் நீதித்துறைக்கு அமைய சில விடயங்களுக்குத் தடை நிலவுவதாகவும் எனவே 30/1 பிரேரணையின் பரிந்துரையில் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை இலங்கை மறுக்குமாக இருந்தால் அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும்.
நீதிபதிகளின் தேசியம் குறித்து அவதானம் செலுத்துவது முக்கியமில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தை எவ்வாறு தடைநீக்கி முன்னெடுக்க முடியும் என்பது குறித்த அவதானமே முக்கியமானது” – என்றார்.