மாகாணங்களில் ஆளுநர் ஆட்சி ஜனநாயக விரோதச் செயல்! – உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்கிறார் சம்பந்தன்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல.”

– இவ்வாறு சபையில் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களைப் பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும்.

அதேபோல் மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரை வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும். எவ்வளவு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் தேர்தல் நடத்தி எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணுங்கள் என்பதே எமது நிலைப்பாடாகும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆளுநர் மூலமாக ஆளுகைகளைக் கையாள்வது ஜனநாயகச் செயற்பாடு அல்ல. மாகாண சபை உறுப்பினர்களின் மூலமாகவே அதனைக் கையாள முடியும். மக்களுக்கான சேவையை மாகாண சபைகளின் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் மூலமாகவே கையாள முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *