கோட்டா மீது கொலை வழக்கு! அமெ. நீதிமன்றத்தில் தாக்கல்!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோட்டாபய மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லசந்த விக்ரமதுங்கவின் நெருங்கிய ஊடக நண்பர்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவைப் போட்டியிடவிடாமல் தடுக்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டால் அது நிறைவடையும் வரையில் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு இடமளிக்கப்படாதென முறைப்பாட்டுத் தரப்பு நம்புகின்றது.

இவ்வாறான நிலையில் கோட்டாபய மீது வழக்கு தொடரப்பட்டால் அவருக்கான அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும். இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

எப்படியிருப்பினும் இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இலங்கையின் தேர்தல் சட்டத்தின்படி இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *