இராணுவத்தினரிடம் கையளித்த போராளிகளுக்கு நடந்தது என்ன? – சபையில் மாவை கேள்வி

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போரின்போது போராளிகள் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அதேபோன்று இறுதிப் போரின்போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் காணப்பட்டன.

அவரின் ஆட்சிக்காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் பலமுறை அவர்களைச் சந்தித்துப் பேசினோம். இதன்போது அவர் முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விவரங்கள் குறித்து 7 இற்கும் மேற்பட்ட கோப்புகளை எங்களிடம் காட்டினார்.

அந்தப் பட்டியல் தற்போதும் அரசிடம் காணப்படுகின்றது என நாம் நம்புகின்றோம்.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினர்களிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *