கொழும்பை இறுக்கிப் பிடிக்கின்றது சர்வதேசம்! இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இதுவரை 20 நாடுகள் பேராதரவு!!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் – ஜேர்மனி தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.
இந்தத் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்துள்ளன.
அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி , நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்க முன்வந்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.
மேலும் பல நாடுகள் இன்று இணை அனுசரணைப் பட்டியலில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.