புத்தளத்தில் கோர விபத்து! நால்வர் பலி; 5 பேர் காயம்!!
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் வானில் பயணித்த 8 பேர் மற்றும் வீதியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் வானில் பயணித்த மூவரும் வீதியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.