மும்மொழிகளிலும் பிறப்புச் சான்றிதழ்!
சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமைப் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என, பதிவாளர் நாயகம் என்.சீ. சத்துர வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிறப்புச் சான்றிதழ்கள், விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இப்புதிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
தற்போது சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக, ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ்கள் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
அத்துடன், தமிழ் மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக, ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ்கள் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )