தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு மைத்திரி – மஹிந்த கூட்டணி எதிர்ப்பு! – நாடாளுமன்றத்தில் குரலெழுப்பவும் முடிவு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ள தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசமைப்புப் பேரவையின் தமது பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா எம்.பியை நியமிக்கும் முடிவில் மாற்றம் செய்யாதிருக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இந்தப் பெயரைப் பிரேரித்து அரசமைப்புப் பேரவைக்கு அனுப்பியபோதும் இதுவரை அந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
எனினும், டக்ளஸ் எம் பியையே அதற்கு நியமிக்க வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.