பெற்றோர், காதலி உட்பட ஐவரை சுட்டுக்கொன்று இளைஞர் வெறியாட்டம்!
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம் லூசியானாவில் பெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்று தப்பிய இளைஞரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட்.
51 வயது நிறைந்த இந்த தம்பதியின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21). இவர் தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களை சுட்டது டகோட்டா எனப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர்.
இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (வயது 20) எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி எனக் கூறப்பட்டது.
இந்த கொலைகளை செய்து விட்டு டகோட்டா தப்பிச் சென்றுள்ளான் எனக் கூறப்படுகின்றது.
தொடர்ந்து பொலிஸார் டகோட்டாவைத் தேடி வருகின்றனர்.