தமிழர் தலைமைகளுக்கு ஐ.தே.க. மீதே நம்பிக்கை! – கூறுகின்றார் கபீர் ஹாசீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான நம்பிக்கையில்தான் தமிழர் தலைமைகள் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு கேட்கின்றனர் என அந்தக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு எம் மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஐக்கியமாக வாழ முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
போரை வெற்றி கொண்ட தலைவர்களினால் மக்களை ஒன்றிணைக்க முடியாது போனபோதும் நாம் மக்களை ஒன்றிணைத்துள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னரே மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச சமூகத்திடம் இருந்து வந்த அழுத்தங்களை இல்லாது செய்தோம்.
எமது தலையீட்டால்தான் சர்வதேச அழுத்தங்களை நீக்கி நாட்டைக் கட்டியெழுப்பும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்கிக் கொண்டோம். இராணுவத்தை தண்டிக்கும் சர்வதேச நோக்கத்தை இல்லாது செய்தோம்.
எனினும், இவர்கள் இப்போதும் அதே கதைகளைக் கூறிக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு இனவாதம் மட்டுமே ஆயுதம்.
இவர்கள் தைரியமான தேசியவாதிகள் என்றால் – தூய்மையான அரசியல் கொள்கை உள்ளவர்கள் என்றால் இவர்களுக்கென்ற தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கி – சகல மக்களையும் உள்வாங்கிய கொள்கை ஒன்றை உருவாக்கி எம்முடன் நேரடியாக அரசியல் போட்டிக்கு வரவேண்டும்” – என்றார்.