பிரிக்கப்பட முடியாத – பிளவுபடாத நாட்டுக்குள் தமிழருக்கு அனைத்து உரிமைகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்து
பிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உப ரயில் நிலையம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வரவேண்டும்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்திருக்கின்றோம்.
போர் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமாகவே நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
எனவே, ஆளுநர் என்ற ரீதியில் நான் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோருக்கும் நன்றி செலுத்துகின்றேன்.
எதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நானும் எமது மக்களும் தயாராகவே இருக்கின்றோம்” – என்றார்.