ரூ. 700 வேண்டாம்! ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதீர்!! – பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்
அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவே வேண்டும். 700 ரூபாயை ஏற்கமுடியாது என வலியுறுத்தி பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதிறை மறித்து, தோட்டத் தொழிலாளர்கள் இன்று (27) சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ – அட்டன் பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கெம்பியன், பெற்றசோ, செல்வகந்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதனால், அட்டன் தொடக்கம் பலாங்கொடை வரையிலான பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் முடங்கியது.
” 700 ரூபா அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. அதனை ஏற்கமுடியாது.
வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் எமக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருவேன் என தீக்குளிக்க முற்பட்ட இராஜாங்க அமைச்சரும், ஆயிரம் ரூபாவை வலியுறுத்திய தொண்டமானும் கூட இன்று 700 ரூபாவுக்கு உடன்பட்டுள்ளனர். இது வேதனைக்குரிய விடயமாகும்.
இன்றைய வாழ்க்கை செலவு அடிப்படையில் 700 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது ஒரு கண் துடைப்பு விடயமாகும்.
இந்த விடயத்தில் அரசாங்க தரப்பு பக்கத்திலும் தொழிலாளர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை வழங்கியுள்ள நிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம் .”என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
க.கிசாந்தனர்.