நாடாளுமன்ற கன்னி அமர்வின் நடைமுறைகள் எவை?

தெற்கில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு முழுமையாக தணிவதற்குள், தேர்தலுக்குரிய அறிவிப்பும் வெளியாகியுள்ளதால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


‘மெகா’ கூட்டணி அமைத்து வாக்குவேட்டை நடத்துவதற்கு பிரதான கட்சிகள் தயாராகிவரும் நிலையில், சிறுகட்சிகளும் தேர்தல்களம்மீது கழுகுப்பார்வை செலுத்தியுள்ளன.

அரசியல் குழப்பநிலை குறித்து பலதரப்பினரும், பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அரசமைப்பின் பிரகாரமே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும், அரசமைப்பைமீறும் செயல் என ஐக்கிய தேசியக்கட்சியும் அறிவித்துவருகின்றன.
 
எனவே, ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியின் பிரகாரம் 2019 ஜனவரி 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமாயின், 9 ஆவது நாடாளுமன்றத்தின்  கன்னி அமர்வு ஜனவரி 17 ஆம் திகதி நடைபெறும். கன்னி அமர்வின் நடைமுறைகள் எவையென பார்ப்போம்.

கன்னி அமர்வு!

இலங்கை ஜனநாயக சோஸலிஷக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நடைபெறும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும், தேசியப்பட்டியல்மூலம் நியமிக்கப்பட்டவர்களும் அன்றைய தினம் அவைக்கு வருவார்கள். ( நாடாளுமன்றம்கூடும் முதல்நாளில் குறித்தொதுக்கப்பட்ட ஆசனத்தில்தான் உறுப்பினர்கள் அமரவேண்டும் என்பது கட்டாயமில்லை)

அதன்பின்னர் கூட்டத்தினை கூட்டுவது குறித்தான ஜனாதிபதியின் பிரகடனத்தை நாடாளுமன்ற செயலாளர் வாசித்த பிறகு சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.

சபாநாயகர் தேர்வு

எப்படி நடக்கும்?

சட்டவாக்கச்சபையில் முழு அதிகாரம் படைத்த நபராக சபாநாயகரே திகழ்வார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் இவரே பொறுப்புமிக்கவராக விளங்குவார்.

ஜனநாயகத்தின் கடவுளாகப் பார்க்கப்படும் சபாநாயகர் பதவிக்கு அனுபவம்மிக்க – கண்ணியமான உறுப்பினர் ஒருவரே தெரிவுசெய்யப்படவேண்டும். அப்போதுதான் அவைக்குள்ளும் ஜனநாயகம் கோலோச்சும்.

சபாநாயகர் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின்பெயரை முன்மொழிவதற்கு, எம்.பியொருவர் தீர்மானித்திருந்தால் முன்கூட்டியே அவரின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும்.

நாடாளுமன்றசெயலாளரை விளித்து, குறித்த நபரை சபாநாயகராக அறியப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அக்கிராசனத்தில் அமரும்படி பிரேரித்தல் வேண்டும். அதை மற்றுமொருவர் வழிமொழியவேண்டும்.

ஒரு உறுப்பினரின் பெயர்மாத்திரம் முன்மொழியப்பட்டால் குறித்த நபரே சபாநாயகராக, நாடாளுமன்ற செயலாளரால் அறிவிக்கப்படுவார். ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படுமானால் – இரகசிய வாக்கெடுப்பு மூலமே சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சமனான வாக்குகள் கிடைக்கும்பட்சத்தில் திருவுளச்சீட்டிழுப்புமுறை கையாளப்படும்.

சபாநாயகராக தெரிவுசெய்யப்படுபவர், நாடாளுமன்ற செயலாளரின் நெறிப்படுத்தலின்படி உறுதியுரை எடுப்பார்.

சபாநாயகர் தேர்வு நிலையியற்கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் நடந்தபின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வார்கள்.

பிரதிசபாநாயகர், குழுக்களின் தவிசாளர் பதவிகளுக்கு தேர்வு இடம்பெறும்.
இந்நடவடிக்கைகள் மாத்திரமே கன்னிஅமர்வில் இடம்பெறும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்படுகின்ற திகதிவரை சபை ஒத்திவைக்கப்படும்.

சபை கூடும் திகதியும் நேரமும்
எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

மாதந்தோறும் முதலாவது, மூன்றாம் வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நாடாளுமன்றம் கூடவேண்டும்.
செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பகல் ஒரு மணிக்கும், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 10.30 மணிக்கும் சபை அமர்வு ஆரம்பமாகும்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் அமர்வு நடக்காது. விசேட அமர்வுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் சபை அவசரமாகக் கூடும்.

கூட்ட நடப்பெண்!

சபாபீடத்துக்கு தலைமைதாங்கும் ( அக்கிராசனத்தில்) அமர்ந்திருக்கும் உறுப்பினர் உட்பட 20 பேர் சபைக்குள் கட்டாயம் இருக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால், உறுப்பினர்கள் அந்நிலைமையை சபாபீடத்தின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அதன்பின்னர் அழைப்பு மணி அடிக்கப்படும் ( கோரம்) 5 நிமிடங்களுக்குள் 20 உறுப்பினர்கள் அவைக்குள் வராவிட்டால், சபை ஒத்திவைக்கப்படும்.

புதிய நிலையியற்கட்டளையின் பிரகாரம் கூட்டநடப்பெண் 17 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலம் – நாடாளுமன்ற நிலையியற்கட்டளைகள்.

அமைச்சரை, எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறாத பட்சத்தில் என்ன நடக்கும், அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் சொல்வது என்ன என்பது உட்பட மேலும் பல விடயங்களை விரைவில் பார்ப்போம்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *