நாடாளுமன்றத்திற்கு வருகை தராத அமைச்சர்கள்: வெரிட்டே ரிசர்ச் ஆய்வு
“நாட்டை சீராக்கும் இடம்” என இலங்கை நாடாளுமன்றம் அழைக்கப்பட்டு வருகின்றது.
1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அறிமுகப்படுத்தியதன் பின் நாடாளுமன்றத்தின் பலம் ஒரு அளவுக்கு குறைவடைந்து காணப்பட்டது.
இலங்கைத்தீவின் அரசியல் களத்தில் பாரிய ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இந்த தருணத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இலங்கைத்தீவின் அரசியல் களம்
அந்த வகையில், ஒரு காலப்பகுதியில் நாடாளுமன்றம் விநோத மேடையாக காணப்பட்டதை நாம் அறிவோம்.
அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அடிதடி சண்டைகளில் ஈடுபட்டதையும் நினைவு கூரலாம்.
சபையில் அமைச்சர்கள் மிளகாய்த் தூளை வீசி விளையாடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இறுதியில், நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அவர்களுக்கு வாக்களித்த மக்களே எண்ணும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கை காணப்பட்டது.
ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு இயலுமை இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்ப மக்களால் முடியவில்லை.
225 பேரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் போராடினாலும் கூட இன்னுமும் 225 பேருடனான நாடாளுமன்றமே காணப்படுகிறது.
எனினும் தற்போது பிரச்சினை அதுவல்ல.
இந்த 225 பேரில் 83 பேர் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள் கூட நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வருகை தரவில்லை.
வீட்டுக்கு செல்ல முடியாது எனக் கூறும் இவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரவும் விரும்புவதில்லை.
வெரிட்டே ரிசர்ச் ஆய்வு
வெரிட்டே ரிசர்ச் (verite research) நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, புத்திக பத்திரண,ப்ரேமநாத் சீ. தொலவத்த, சரித ஹேரத், அனுராத ஜயரத்ன, லலித் குமார, உதய குமார், குணதிலக ராஜபக்ச, அஜித் ராஜபக்ச, பிரமித பண்டார ஆகியோர் அதிக நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையின்படி, ஜனவரி மாதத்தில் ஒரு நாளாவது நாடாளுமன்றத்துக்கு வருகை தராத அமைச்சர்களின் பெயர் பட்டியலில் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரும் அமைச்சர்களுக்கு கொடுப்பனவு ஒன்று வழங்கப்படும். இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கூட அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதில்லை.
142 பேர் குறைந்தபட்சம் குறித்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கின்றனர்.
வெரிட்டே ரிசர்ச் (verite research) நடத்திய ஆய்வில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தும் கூட ஒரு வார்த்தை கூட பேசாத அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் மத்தியில் மனக் கசப்பு
இத்தகைய அமைச்சர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் எந்தவிதமான சேவையோ,பயனோ இல்லை.
அவர்கள் அரசியலைத் தவிர மற்ற அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு வாக்களித்த பொதுமக்கள மீதான அவர்களின் எண்ணப்பாடு மிகவும் தாழ்மையான நிலையில் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் தொடர்பில் பொது மக்களுக்கு மனக் கசப்பு மாத்திரமே காணப்படுகிறது.