எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் அநீதி! – சபையில் சீறினார் சம்பந்தன்

“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான செயற்பாடு. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பதற்கு மஹிந்த தகுதியற்றவர். இந்த விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவரின் உரையின் முழு விபரம் வருமாறு:-

பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பின்வரும் கேள்விகளை எழுப்புவதற்கு சபாநாயகரான தங்களது அனுமதியை வேண்டி நிற்கிறேன்.

1. எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் நீங்கள் டிசம்பர் 18ஆம் திகதி 2018 அன்று நாடாளுமன்றில் ஒரு அறிக்கையை கொடுத்திருந்தீர்கள். அந்த அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கடிதம் மூலம் வேண்டியிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அந்தக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.

2. சில உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தனர், அவற்றுள் முதலாவது, கேள்விக்கிடமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இரண்டாவது அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளபோதும், அரசில் அவர்கள் ஓர் அங்கமாக இருப்பதன் காரணமாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை வகிக்க முடியாது எனவும், இரண்டாவதாக, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகாரம், தேர்தலின்போது அவரது பெயரை முன்மொழிந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி முற்றிலும் வேறுபட்ட பொதுஜன பெரமுன அரசியல் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளார். அவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் இரத்தாகியுள்ளது. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கு முடியாது என்பவையாகும். இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பிறிதொரு நாளில் பதில் தருவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

3. இது தொடர்பில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நாடாளுமன்றில் நான் பேசியிருந்தேன். எனது உரையிலே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். மேலும், அந்த உரையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான என்னை 2015 செப்டெம்பரில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்ததையும், மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான என்னை 2018 ஆகஸ்ட்டில் மீண்டுமொருமுறை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்திருந்தமையையும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்றின் எதிர்க்கட்சியிலுள்ள அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலும் அங்கம் வகித்திருந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இராண்டாவது பெரும்பான்மை கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் அங்கீகரித்திருந்தீர்கள்.

4. உங்கள் சார்பில் பிரதி சபாநாயகர் இம்மாதம் அதாவது ஜனவரி 8ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டினை அவர் அறிவித்திருந்தார்.

அந்த அறிக்கையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிப்பதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றது என்பது தொடர்பில் எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.

ஆகையினாலே, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவரான என்னை இரண்டுமுறை முதலாவது 2015 செப்டெம்பர், இரண்டாவது 2018 ஆகஸ்ட் ஆகிய தடவைகளில் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்தமைக்கான மிக முக்கிய காரணம் தொடர்பில் கவனம் செலுத்துவதில் நீங்கள் தவறிழைத்துள்ளீர்கள்

5. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தங்களது தகவலுக்காகவும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுவது எனது கடமை என நான் கருதுகிறேன்.

a. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் 30ஆவது உறுப்புரைக்கமைய குடியரசின் ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும், நிறைவேற்று தலைவராகவும், அரசின் தலைவராகவும் இருக்கிறார்.

b. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் உறுப்புரை 42 உப பிரிவு 1, 2 மற்றும் 3இன் பிரகாரம்,

1. குடியரசு அரசை வழிநடத்துவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும்.
2. அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக நாடாளுமன்றுக்குப் பொறுப்புக்கூறவும் பதிலளிக்கவும் வேண்டும்.
3. ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுவார்.

6. மேலே 5ஆவது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில், குடியரசின் ஜனாதிபதி நிறைவேற்று தலைவராகவும், அரசின் தலைவராகவும், அமைச்சரவை அங்கத்தவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுகின்றார் என்பதனை நீங்கள் கண்டுகொள்ளலாம்.

ஜனாதிபதி அங்கத்தவராகவும் தலைவராகவும் உள்ள அமைச்சரவையானது கூட்டாக நாடாளுமன்றத்திற்கு பொறுப்பும் பதிலும் கூறவேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.

மேலும், அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 51ஆவது உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரையில், பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும் செயற்பாடுகளையும் தனக்கு நியமித்துக்கொள்ள முடியும். அதைப்போன்றே இது தொடர்பிலான அமைச்சுக்களையும் தீர்மானித்து தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும், செயற்பாடுகளையும் தனக்கு நியமித்துக் கொண்டுள்ளார்.

இது தவிர மேலும் சில விடயங்களையும் செயற்பாடுகளையும் ஜனாதிபதி தனக்கு நியமித்துள்ளார்.

7. ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவராவார்.

8. எனவே, தற்போதைய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி, பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவையின் தலைவராகவும்,நிறைவேற்றின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரணத்தினால் கூட்டாக நாடாளுமன்றத்திற்குப் பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்ற அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும், அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் திகழ்கிறார்.

9. எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான உறுப்பினராவார். மேலும், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படியான கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரே கோரியிருந்தார்.

10. எனவே, ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அந்த அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கும் அதேவேளை அவரும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படிக்கு கோரப்பட்ட மஹிந்த ராஜபக்சவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்

11. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் கடமைகள் செயற்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவின் கடமைகள், செயற்பாடுகளிற்கிடையில் மிகத் தெளிவான முரண்பாடு காணப்படுகின்றமையை நீங்கள் கண்டுகொள்ளலாம்.

அவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் உறுப்பினர்களாவார்கள்.

இந்தப் பின்னணியில், நாட்டின் முன்னணி சட்ட மேதைகளில் ஒருவரான கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம 2019 ஜனவரி 6ஆம் திகதி ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

அவர் பின்வருமாறு கூறுகிறார். “அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி அரசின் தலைவராவார். அவரின் சொந்த விருப்பின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஒரே சிந்தனையை உடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி உள்ளடங்கலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவராக இருக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் மஹிந்த ராஜபக்ச இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

ஆகவே, ஜனாதிபதி எவ்வாறு ஒரே நேரத்தில் அரசின் தலைவராகவும் எதிர்க்கட்சியின் தலைவராகவும் செயற்பட முடியும்? அவர் அவ்வாறு செயற்படுவதானது அரசியல் யாப்பிலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயகப் பணப்பை மீறும் செயலாகும் என்பதனையும் குறித்து நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் விளக்கம் கேட்ட வேண்டும்” என்று கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தக் கூற்றானது இங்குள்ள முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அந்த அங்கீகாரத்தை நீங்களே அவருக்கு வழங்கியிருந்தீர்கள்.

12. முன்னாள் ஜனாதிபதிகளின் காலங்களிலும் இப்படியான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகக் காட்டும் முயற்சியொன்றும் இடம்பெறுகின்றது. இத்தகைய கேள்வி இதற்கு முன்பு எழுப்பப்படவில்லை என்பதனையும், இத்தகைய கேள்விக்கு எந்தவொரு சபாநாயகராலும் தீர்ப்பொன்று கொடுக்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போது இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் யாப்பின் பிரகாரமும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் பிரகடனங்களின் அடிப்படையிலும் அரசின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளையும் கருத்தில்கொண்டு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.

13. இந்தப் பின்னணியில், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த ‘எர்ஸ்கின் மே’ 24ஆம் பதிப்பின் 334 மற்றும் 335ஆம் பக்கங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நேரம் தொடர்பிலும் அத்தகைய நேரத்தினை யார் தீர்மானிப்பது என்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். “நிலையியல் கட்டளை 14இன் பிரகாரம், 20 நாட்கள் அமர்வுகளில் ஒவ்வொரு அமர்விலும் எதிர்க்கட்சியினால் தெரிவு செய்யப்படும் விடயங்கள் அரசால் தெரிவு செய்யப்படும் விடயங்களை விட முன்னுரிமை பெறும்.”

மேலும், “17 நாட்கள் எதிர்க்கட்சித் தலைவராலும் 3 நாட்கள் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவராலும் தீர்மானிக்கப்படும்.

இது அரசில் அங்கம் வகிக்காத நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த காரணங்களின் அடிப்படியில் எதிர்க்கட்சியாகத் தெரிவு செய்யப்படும் கட்சி அரசில் அங்கம் வகிக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

மேலும், நான் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களின் அடிப்படியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கின்றது. அதேவேளை, எதிர்க்கட்சியில் இரண்டாம் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சிக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகின்றது.

அந்தநிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி/ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எமது நாடாளுமன்றத்தில் உள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாடாளுமன்றத்தின் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டம் 8ஆம் பிரிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றத்தின் குறிப்புகளோ அல்லது அச்சபையின் நடவடிக்கைகளோ அல்லது அச்சபையின் குழுவொன்றின் அறிக்கையோ முதல் தோற்ற அளவிலான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் எமக்கும் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

14. மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு மாறி இன்று அரச ஆசனங்களில் அரசை பிரதிநிதித்திடுவப்படுத்துகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றாகும்.

இந்த நிலைமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கின்றது என்பதனை உறுதி செய்யும் அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளரினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டவருமான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவராவார் என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றது

15. இரண்டாவது பிரச்சினை பின்வரும் விடயம் தொடர்பிலாகும்.

மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வேளை அவரது பெயர் பிரேரிக்கப்பட்டிருந்த கட்சியின் அங்கத்துவத்தை இழந்துள்ளதன் விளைவுகள் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகாரமும் இது தொடர்பில் அந்தப் பிரிவில் உள்ளடக்கியுள்ள விடயங்களின் தாக்கம் போன்றவை தொடர்பானவையாகும்.

நீங்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளதால் இந்த அறிக்கையில் இதனை நான் கையாளவில்லை என்பதனைப் பணிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

16. எனினும் இந்த விடயம் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதனையும் இந்த விடயம் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு சரியான இடத்தில எட்டப்பட வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

17. இந்த விடயம் தொடர்பில் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என்பதோடு, இந்த நாட்டின் அதியுயர் சட்டமான அரசியல் சாசனமும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளீடுகளும் தனி நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சூழ்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கோ திசை திருப்புவதற்கோ இடமளிக்கமுடியாது.

அத்தகைய நடவடிக்கையொன்றுக்குத் துணைபோவதென்பது அரசியல் யாப்பின் புனிதத் தன்மையை மறுக்கும் செயலாகவே பார்க்கப்படும்.

எனவே, அரசியல் யாப்பும் அதன் நடைமுறைகளும் நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சாசனங்கள் என்பன முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதி செய்து கொள்வதற்கான இந்தக் காரணங்களை பதிவு செய்வது எனது கடமையாக கருதுகின்றேன்.

18. மேலும் நானோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி/ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பதவி ஆசை பிடித்தவர்கள் அல்ல என்பதனை மிகத் தெளிவாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.

நாங்கள் ஒருபோதும் பதவிகளை நாடினவர்கள் அல்லர். எமக்கு நாடாளுமன்றத்தில் ஆறு வருடங்கள் இருக்கின்ற சந்தர்ப்பம் இருந்தபோதும் 1983ஆம் ஆண்டு கொள்கையின் நிமித்தம் நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்த காரணத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த 16 பேர் எமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தோம்.

16 பேரில் முதலாவதாக உறுப்புரிமையை இழந்தவன் நான். பொதுமக்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம் மேலும் பல தடவைகளில் நாங்கள் பதவிகளை ஏற்க மறுத்துள்ளோம்.

ஆனால், பேரினவாதத்தை விதைக்கும் ஒரு சிலரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் யாப்பினையோ ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசன நடைமுறைகளையோ சாசனங்களையோ திரிவுபடுத்தி திசை திருப்புவதன் மூலம் சிறுபான்மை கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் உரிமைகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், அரசியல் சாசனத்தில் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும். ஆயினாலேதான், சபாநாயகரே இந்த அறிக்கையை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.

– இப்படி இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *