தாயகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்…..!
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தின் பிரதான வீதியோரத்தில் அனல் பறக்கும் வெயிலில் நின்றுகொண்டு, ஒருசான் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக சின்னஞ் சிறுசுகள் வீதியில் செல்கின்ற உறவுகளிடம் கையேந்தி நிற்பதை பார்த்த அந்த நிமிடமே எனது மனம் சுக்கு நூறாகி விட்டது.
என்ன செய்வது என்னிடம் கையிருப்பில் இருந்த பணத்தை பகிர்ந்து கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து நகரகூட மனம் இல்லாமல் பல சிந்தனையில் எனது வாகனம் நகர்ந்தது.
முடியவில்லை கண்கள் தினமும் கலங்கின்றது வேதனையில்… ஐயா வாகரை பிரதேச செயலாளர் உட்பட அரச உத்தியோஸ்தர்களே! கதிரவெளி கிராம உத்தியோஸ்தர் மற்றும் பாடசாலை சமுகம் கிராம மட்ட அமைப்புக்களே!!
இந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வி கற்கின்ற வயதில் இப்படி தெருவில் நின்று கையேந்துவது தங்கள் பார்வைக்குத் தெரியவில்லையா?
அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றீர்களா? தங்களுக்கு மனித உணர்வே இல்லையா? தங்கள் பிள்ளைகள் போல் தோன்றவில்லையா? எமது இனம் இப்படி வறுமையில் அழிந்து போகின்றது, அபிவிருத்தி என்பது முதலில் தனிநபர் அபிவிருத்தி என்பதுதான் ஒரு சிறந்த அபிவிருத்தி ஆகும்.
இதை விட்டுவிட்டு வீதிகளையும், பாலங்களையும், கட்டடங்களையும் கட்டுவதால் அபிவிருத்தி ஆகிவிடுமா? எதற்காக ஒரு பிரதேச செயலகம் எதற்காக அரச உத்தியோகஸ்தர்கள் என்று கேட்க தோன்றுகின்றது.
ஐயா தங்களுக்கு சிறந்த மனிதநேய உணர்வு இருந்தால் இந்த சிறுவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொடுக்க உதவுங்கள்.
இல்லை என்றால் அந்தக் குடும்பங்களை இனம் கண்டு தகுதியான பொருளாதாரத்தைப் பெறுவதற்கு சிறந்த தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுங்கள்.
ஐயா தங்கள் கால்களில் விழுந்து கேட்கின்றேன் உதவுங்கள்… முடியவில்லை ஐயா மனம் நெருப்பாக கொதிக்கின்றது…. தயவு செய்து இந்த சிறுவர்களுக்கு கருணை காட்டுங்கள்…
இந்தப் பதிவைப் பார்க்கும் எனது அன்பு சொந்தங்களே! ஒருமுறை இந்த சிறுவர்களின் முகத்தைப் பாருங்கள்… வறுமை எப்படி வாட்டுகின்றது என்று உங்களிடம் நான் கரம் ஏந்துகின்றேன்…
தயவு செய்து அவ்விடம் சென்று முடிந்தவரை உதவுங்கள் ஐயா… தங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.. நான் ஒரு செல்வந்தன் என்றால் இப்படி யாரிடமும் கரம் ஏந்தமாட்டேன்.
என்னிடம் இறைவன் கொடுக்கவில்லை. ஆனால், உதவும் எண்ணம் மட்டும் உள்ளது .
எண்ணம் நினைவாக என் கையில் பணம் இல்லை; பதவி இல்லை; அரசியல் இல்லை. இருப்பது எல்லாம் உதவும் எண்ணம் மட்டுமே உள்ளது. உதவுங்கள்! உதவுங்கள்!! வறுமையை நீக்கக் கரம் கொடுங்கள்!!!
இன்று சமூகத்தில் பெண்களுக்கு எத்தனையோ சீர்கேடுகள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்தப் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் உட்பட அரச உத்தியோஸ்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் தெருவில் கையேந்தும் பெண் குழந்தைகளுக்கு உதவ முன்வரவேண்டும்.
– சமூக ஆர்வலர் ஒருவர்