மஹிந்த தமிழிழ் உரையாற்றுவது சிறப்பு – பிரதமர் ரணில் பாராட்டு!
ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலியில் இன்று ( 19) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” புதிய அரசியலமைப்பு வந்துவிட்டது, நாடு பிளவுபடபோகின்றது என்றெல்லாம் சிலர் போலி பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். ஆனால், புதிய அரசியலமைப்பு இன்னும் இயற்றப்படவில்லை. ஏன்! சட்டமூலம்கூட தயாரிக்கப்படவில்லை.
சட்டமூலம் தயாரிக்கப்பட வேண்டுமென்றால் அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம். அது கிடைக்குமா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. கட்சித் தலைவர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தைப்பொங்கல் தினத்தைமுன்னிட்டு தமிழ்மொழியில் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். அது சிறப்பான செயல்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டிருந்தார். நாமும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம். நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான யோசனைகளை ஒருபோதும் முன்வைக்கமாட்டோம்.
என்னுள் எவ்வித மாற்றமும் இல்லையென சிலர் விமர்சிக்கின்றனர். அன்று முதல் இன்றுவரை ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்ந்து பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என நம்புகின்றேன். அதேபோல் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுவோம்.” என்றும் பிரதமர் கூறினார்.