மகிழ்ச்சி பொங்கட்டும்! இணக்கம் ஏற்படட்டும்!! – ஜனாதிபதி வாழ்த்து
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. கமத்தை முதன்மையான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது பறைசாற்றுகின்றது” என்று தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
“பால் பொங்கி வழிவதைப்போல அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்சிசுயம் பெருகிப் பிரவாகித்து நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள் தமது விளைச்சலால் பெற்றுக்கொண்ட புத்தரிசி மற்றும் தானியங்களோடு தூய பாலும் சர்க்கரையும் கலந்து பொங்கி மகிழ்கின்றனர்.
பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.
”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவரும் உறுதியான நம்பிக்கையாகும்.
இந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான எளிமையான உறவை மென்மேலும் பெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்று அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.