ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகின்றார் மைத்திரி!
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் ஜனாதிபதிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பின்னணியிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரை அவர் மாற்றியுள்ளார் என்றும், மாகாணங்களுக்கு தனது ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.