எந்தவொரு வழியிலாவது இந்த அரசை வீழ்த்துவோம்! – மஹிந்த தரப்பினர் சூளுரை
“எந்த வழியிலாவது முயற்சித்து கிடைக்கும் முதல் சந்திப்பத்திலேயே இந்த அரசை வீழ்த்திவிட்டுப் புதிய அரசை நிறுவுவோம்.”
– இவ்வாறு சூளுரைத்துள்ளார் மஹிந்த தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க.
தேர்தல் ஒன்றின் மூலமோ அல்லது வேறு வழி முறைகள் மூலமோ அதனை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
பொரளையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவை வழங்குவோம்.
நாட்டை நேசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்புச் செய்தால், ஏதாவது ஒரு வழிமுறையில் அரசைக் கைப்பற்றுவோம். அது நிச்சயம் நடக்கும். அதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம்” – என்றார்.