மைத்திரிக்கு எதிராக குமார வெல்கம எம்.பி. தொடர் போர்க்கொடி!
“நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் புதியதொரு ஜனாதிபதியால் மாத்திரமே முடியுமென்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆகையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அரசமைப்பை மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையால் ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் மக்களும் ஏனைய தேர்தலைக் காட்டிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே தற்போதைய சூழ்நிலையில் அவசியம் என்பதை உணர்ந்துள்ளார்கள்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் புதிய ஜனாதிபதி ஒருவரால் மாத்திரமே முடியும்” – என்றார்.