மைத்திரியின் கூட்டங்களுக்கு நான் செல்லப் போவதில்லை! – குமார வெல்கம அடுத்தடுத்து அதிரடி
ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன விலகவேண்டும் என்று தெரிவித்த 24 மணித்தியாலங்களுக்குள், மைத்திரியின் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று அதிரடியாக அடுத்த கருத்தைத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும், மஹிந்த அணியான பொது எதிரணியுடன் இணைந்து செயற்பட்டவர் குமார வெல்கம. ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி சார்பில் கோட்டாபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டபோது பகிரங்கமாக எதிர்த்திருந்தார். ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்தவை பிரதமராக மைத்திரி நியமித்ததையும் எதிர்த்திருந்தார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்யும் எந்தவொரு கூட்டத்திலும் இனி கலந்துகொள்ளப் போவதில்லை. அதன்படி ஜனாதிபதி தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு பிறகு ஜனாதிபதியுடன் நடைபெறும் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளாது புறக்கணிக்கப் போகிறேன்” என்று குமார வெல்கம எம்.பி. சிங்கள ஊடகம் ஒன்றிடம் நேற்று தெரிவித்துள்ளார்.