மஹிந்தவைச் சுற்றி ஓநாய்கள்! – ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவிப்பு
மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடனும் நாய்களுடனும் பயணத்தைத் தொடரமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா, தனது நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாரிய கூட்டணி அமைத்துக் கொண்டு உறுதியான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதற்காகவே அரசுடன் இணைந்து கொண்டுள்ளேன்.
எமது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கட்சிப் போசகர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து செயற்படுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், மஹிந்த தற்போது வேறு கட்சி ஒன்றில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளார் எனப் பத்திரிகைகளின் மூலம் அறிந்துகொண்டேன். என்றாலும் மஹிந்தவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடனும் நாய்களுடனும் இந்தப் பயணத்தை தொடரமுடியாது.
சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அநாதரவாக உள்ளனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” – என்றார்.