சட்டவிரோத பிரதமர் பதவியை ஏற்று முட்டாள்தனம் செய்துள்ளார் மஹிந்த! – சாடுகின்றார் அவரின் விசுவாசி கோமின் தயாசிறி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வழங்கிய சட்டவிரோத பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று மஹிந்தவின் விசுவாசியான சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மஹிந்தவின் சட்டவாளராக இருந்தபோது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார்.
இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு இப்போது மிகவும், மோசமான உறுதியற்ற நிலையில் இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியே இப்போது, மிகவும், சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசமைப்பில் வழியில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு சட்ட வழிமுறை உள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.