ரணிலை பிரதமராக்குவதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை! – ஜயம்பதி விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு
“தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அப்பால் நாட்டின் சட்டத்திட் டங்களுக்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதைத் தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வேறு வழியில்லை.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“நாட்டை இதற்கு முன்னர் ஆட்சி செய்த ஜனாதிபதிகள், தங்களுக்கு விரும்பாதவர்களுக்குப் பிரதமர் பதவியை வழங்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க,1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பிரதமராக நியமித்துள்ளார். அதேபோன்று,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், 2004ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதமராக நியமிக்க வேண்டியேற்பட்டது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் வேலை செய்ய முடியுமா? இல்லையா? என்பது தனிப்பட்ட விடயமாகும்.
எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவை சட்டரீதியாக பிரதமராக நியமிக்க வேண்டியது அவசியம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.